மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, January 26, 2026

க.க.கா பாகம் 6 : எபிசோடு : 229

 

அந்த அப்பார்ட்மென்ட் காலையில் விழித்துவிட்டிருந்தது.

கீழ் தளத்தில், பார்க்கிங்கை ஒட்டி இருந்த அந்த வீட்டில் மணியோசை கேட்டது. சதாசிவம் பூஜையில் ஆழ்ந்திருந்தார். அவரைக் கூப்பிட வந்த சிவகாமி கணவர் பூஜையில் அமர்ந்திருப்பதை பார்த்ததும் பூஜை அறையின் வாசலிலேயே நின்றாள். கண்ணை மூடி கணவர் மந்திரங்கள் சொல்லும் அந்தப் பாங்கினை அவள் ரசித்துப் பார்த்தாள். கிட்டத்தட்ட 40 வருட தாம்பத்தியம் ஒரு நாள் கிழமை தவறியது கிடையாது . திதிகள் மாறியது கிடையாது .

எல்லா விசேஷ நாட்களிலும் தவறாமல் சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை செய்யும் அவரது அர்ப்பணிப்பு சிவகாமியை அவர் பாற் ஈர்த்திருந்தது. எப்படிப்பட்ட மனுஷன்? எத்தனை நிதானம்? எவ்ளோ கனிவு? இவர் மூலம் மூன்று பிள்ளைகளைப் பெற்று மூன்றையும் கரை சேர்த்து நல்ல கல்வியை கொடுத்து, லக்சரி வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்டு இனி நீங்களே உங்களை பாத்துக்ககங்க’ என்பதாய் விலகிவிட்டார்.

அப்பா என்கூட வந்து இருங்கப்பா”  என மகள்களும் மகனும் கூப்பிட்ட போது கூட, “ அதெல்லாம் தேவையில்லை . பெருசா ஈஷிக்க வேனாம். நீங்க உங்கள் வாழ்க்கை வாழ்ந்துக்கங்க.. சரியா?  நான் என் மனைவியுடன் தான் வாழ்வேன். எங்க வாழ்கை இன்னும் மிச்சமிருக்கு. கொஞ்சம் எங்களுக்காகவும் வாழனுமில்ல?என சொல்லி கடந்த 10 ஆண்டுகளாக இந்த அபார்ட்மெண்டில் குடித்தனம் வைத்து விட்டார்.

ஆடுனது போதும் . காசு காசுனு அலைஞ்சது போதும். இனி உனக்கு நான். எனக்கு நீ. மத்ததெல்லாம் அப்புறம்”  என்ன சொல்லி இருவருமே முதுமை காலத்தில் தங்களது காதல் வாழ்க்கை வாழ ஆரம்பித்திருந்தார்கள்.

அந்த அப்பார்ட்மெண்டில்  தரைத்தளத்தில் இருந்த ஒரு படுக்கையறை கொண்ட பார்க்கிங்கை ஒட்டி இருந்த  படுக்கையை கொண்ட குடியிருப்பு அது.  அந்த வீடு அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

“மயிலாப்பூர்ல கேஜி  பில்டர்ஸ் சூப்பரா ஒரு லக்சரி புராஜெக்ட் போட்டிருக்கான் அங்க போலாமே” மகன் சொன்னான்.

“ இல்லன்னா.., இப்போ ஆர்த்தி பில்டர்ஸ் புராஜெக்ட் செமையா போகுது”

“ போடா வளசரவாக்கம் அகத்திஸ்வரனையும் வடபழனி முருகனையும்  விட்டு எங்கேயும்  வராப்பல இல்ல”

“ எல்லா இடத்துலயும்., தான் சிவன் கோவில் இருக்கே”

“போடா,. மக்கு.., எல்லாம் தான் பொம்பளங்க .. எல்லாம் தாயாயிடுமா?”

அப்பாவை ஜெயிக்க முடியாது.  சதாசிவம் தமிழ்நாடு பொதுப்பணி துறையில் மிகப்பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்றவர். அவருக்கு பென்ஷனாகவே மாதம் ஒரு லட்ச ரூபாய் வந்து கொண்டிருந்தது . காசில் ஒரு பங்கு பிள்ளைகளுக்கு போகாது. அவர்களே  இன்னும் கூட வந்து கொட்டி கொடுப்பார்கள்.

அளவுக்கு மீறிய செல்வம், நல்ல உணவு. ஒரு போன் காலில் விரைந்தோடி வரும் மருத்துவம். அது தந்த ஆரோக்கியம். எத்தனை பேர்க்கு இப்படி ஒரு வளமான வாழ்வு கிடைத்திருக்கிறது?

செலவு பெரிதாக இல்லை என்பதால் அவர்கள் அடிக்கடி டூர் போவார்கள். இந்தியாவில் பார்க்காத இடங்களே இல்லை. விடுமுறை என தனியே அவர்களுக்கு இல்லை.  நினைத்த போது கிளம்பி அடிக்கடி கோயில் குளம் சுற்றுவதும், ஆன்மீக சுற்றுலா போவதும் என அவர்கள் வாழ்க்கையை மிக இனிமையாகவே கழித்து வந்தார்கள்.

செகரட்டரி சங்கீதாவின் மகளுக்கு கல்யாண வரன் ஒன்றும் குதிராமல் போக., ஒரு வாட்டி நவகிரக தலம் சுற்றுலா போய்ட்டு வாயேன்’ என ஐடியா கொடுத்ததும், ஒட்டு மொத்த அப்பார்ட்மென்ட்வாசிகளை ஆன்மீக சுற்றுலாவுகு அழைத்து போனதும் சிவகாமி தான்.

ஒரு ஆத்திர அவசரத்திற்கு அந்த அப்பார்ட்மெண்ட்ஸில் எல்லோருமே அவர்களுக்கு உதவியும் செய்வார்கள். செகரட்டரி சங்கீதா முதல் ரம்யா ரேகா மது, இந்து, ஷில்பா என எல்லா குடும்பங்களுமே அவர்களை மிகவும் பாசமாகவே நடத்தினார்கள்.

அதில் பல பெண்களுக்கு தாய், தந்தை இல்லாதவர்களாக இருந்தார்கள் அவர்கள் எல்லாம் சதாசிவத்தை தந்தையாகவும் சிவகாமியை தாயாகவும் நினைத்துக் கொள்வார்கள் .

இன்று சதாசிவத்துக்கு திருமண நாள். மகள்கள் மகன்கள் வருகிறார்கள் இல்லையோ ஒட்டுமொத்த அபார்ட்மெண்ட்டும் பத்து மணிக்கு எல்லாம் வந்துவிடும். எல்லோரும் காலில் விழுந்து ஆசியைப் பெற்று செல்வார்கள்.

 வயதான தம்பதியர்களாக இருப்பது மட்டும் அல்ல, ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக இருக்கக்கூடிய வயசு முதிர்ந்த்த தம்பதிகள் என்பதால் அவர்களது ஆசிக்காக அந்த குடியிருப்பில் உள்ள எல்லா தம்பதிகளும் காலையிலேயே  வரிசையாக வந்து விடுவார்கள் .

அதற்கு பின்பு மதியத்திற்கு மேலே தான் அவரின் மகன்கள் மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் தேடி  வருவார்கள்.  அதெல்லாம் மதியத்திற்கு மேலே தான்.

இப்போது இந்த அபார்ட்மென்ட்வாசிகள் தான் குடும்பம்.

வேர்க்க விறுவிறுக்க வெறும் வயிற்றில் மனமுருகி பூஜை செய்யும் சதாசிவத்தை பார்க்க ஆட்கள் வர, பத்து மணி தாண்டியும் சதாசிவம் பூஜை முடிக்காததால்,  சிவகாமி மெல்ல தொண்டையை  கனைத்தாள் .அதுதான் அவளது அதிகபட்ச தொந்தரவு.

அதற்கே அவர் மெல்ல திரும்பிஎன்னம்மா” என்றார் கனிவுடன்.

ரம்யாவும் அவங்க புருஷனும் வந்திருக்காங்க”  என சாந்தமான குரலில் சிவகாமி சொல்ல, அவர் “ ரவியா?” என்றார்.

இறுதியாக ஒரு முறை கடவுள் படங்களை வணங்கி, செம்பருத்தி பூவிதழ்களை தூவி கைகூப்பி எழுந்து கொண்டாள் . மனைவி முந்தானையில் வியர்வையை துடைத்து விட., அவர் சிரித்தார்.

“வரவங்களுக்கு  என்ன பண்ணி இருக்கே?”

“இருக்கு. பொங்கல் வடை கொஜ்ஜி பாஸந்தி..”

அவர் ஹாலுக்கு வரும் போது ஷில்பாவும் அவரது கணவனும் இருந்தார்கள்.

‘அடடே!  சங்கர் கூட வந்திருக்காரா? வெரி குட் வெரி குட்” என்றார்

ஆமாங்க. வாழ்த்துகள்”

“ எப்ப  ஆக்லாந்து போறேப்பா?”

“அடுத்த வாரம்..”

அட ரொம்ப அற்புதமான விஷயம் .. எனது சொல்லி  ரம்யாவின் கணவன் ரவிச்சந்திரணை பார்த்தார்.

“ஆஹா ரவி. ரம்யா.. வாங்க”

“வாழ்த்துகள் சார்..’

“ரொம்ப நன்றிப்பா. பசங்க எங்கப்பா? ஸ்கூலுக்கா?”

“ இல்ல ஆனுவல் லீவ்., எல்லாம்  நேத்து கிளம்பி அவங்க அததை வீட்டுக்கு கிளம்பிடுச்சிங்க ” ரம்யா கை கூப்பி பணிவாக சொன்னாள்.  அவர் அவளை ஊடுருவி பார்த்தார். அவள் புன் சிரிப்பு பூத்தாலும் மெல்லிய சோகம் இழையோடுவதை அவர் கவனித்தார்.

“சொர்ண விக்கிரகம் மாதிரி இருக்காடா ரவி, உன் ரம்யா.. விசனப்படாம பாத்துக்க”

‘சரிங்க சார்”

“ரவி., ரம்யா.. நல்ல பேர் பொருத்தம் சதாசிவம்,. சிவகாமி. மாதிரி” அவர் திரும்பி தன் மனைவியை பார்த்தார்.

“ஆமா ”

“சதான்னா நூறு., சில பேர் ஆயிரமுன்னும் சொல்லுவாங்க. நூறு சிவத்துக்கு சமம்னு அர்த்தம் என் பேருக்கு.  நான் சதாசிவம் தான் ஆனா சிவகாமி இல்லன்னா  நான் சாதா சிவம் பா” அவர் சொல்ல எல்லாரும் சிரித்தார்கள்.

‘அந்த மாதிரி தான் உன் பெண்டாட்டி இல்லன்னா  நீயும் ,..:’

“புரிது சார்”

“ போதும் அட்வைஸ்லாம்” சிவகாமி அவரை தடுக்க

“சரி. நிறுத்திட்டேன். சிவகாமி.. எல்லார்க்கும் காபி, பலகாரம் கொடு

அதெல்லாம் இருக்கட்டும்., முதல்ல அம்மாவும்   நீங்களும் கிழக்கு பார்த்து நில்லுங்க” என சொல்லி ரம்யாவும் அவளது கணவரும்  அந்த முதிர்ந்த தம்பதியரின் காலில் விழுந்து  ஆசி பெற்றார்கள்.

ஷில்பா, மது அவர்களது கணவன்களோடு காலில் வந்து விழ எல்லாரையும் ஆசிர்வதித்தார்கள். வரிசையில் சங்கீதாவும் அவள் கனவன் ஆனந்த மூர்த்தியும் வர

“ நீ என்னடா பித்துகுளி. பேரன் பேத்தி எடுத்துட்டு என் காலுல விழறே?”

“ என்ன  மாமா  நான் என்ன உன் ஏஜ் குரூப்பா? உன்னை விட பதினஞ்சு வயசு கம்மில்ல., மரியாதையா ஆசிர்வாதம் பண்ணும் ஓய்” இடமே வெடிச் சிரிப்பானது.

“எங்கடி உங்க மாமனார்? மாமியார்” சிவகாமி ரம்யாவை கேட்க.,

‘அம்மா., அக்கா வீட்டுல இருக்காங்க. நேத்து தான் குழந்தைகளை அழைச்சிட்டு போனாங்க. ஒன் மந்தா அங்க தான் இருப்பாங்க,.. அப்பா இங்க வாசல்லதான் பேப்பர் படிச்சிட்டிருக்கார்” ரம்யாவின் கணவன் பதில் சொன்னான்.

“எல்லாரும் போனப்பறம் ஃபிரண்ட பார்க்க வருவார் போல” சிவகாமி சமாதானமாக, அடுத்து ரேகா, இந்துவும் தம்பதி சகிதமா வந்து போக.,

“ நாங்களும் வரோம்.. நீங்க  உங்க கல்யாண நாளை கொண்டாடுங்க” ரம்யா, சிவகாமியை பாத்து கண்னடிக்க.,

ரம்யாவை சிவகாமி அம்மாள் அணைத்துக் கொண்டாள்.

கடன்லாம் முடிஞ்சிடுச்சாடி?” என கேட்டாள்.

எங்கம்மா? கடன் போய் போயிட்டே இருக்கு.”

இந்த கடன்காரன் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கறாம் போல இருக்கு?”

“ஸ்ரீபெரும்புதூர்ல கல்யாணத்துக்கு முன்னாடி  சீட்டு கட்டி ஒரு லேன்ட் வாங்கி போட்டேன். ரேட் ஏறும்னு வெயிட் பண்றேன். அதை வித்து இந்த கடனை அடைக்க வேண்டியது தான்”

எவ்ளோ போகும்?”

இருவத்தஞ்ச்சு?’

‘கடன் நாப்பத்தஞ்சு லட்சமாச்சே?” சிவகாமி சொல்ல.,

“:அதில்லாம வட்டி  வேற குட்டி போட்டிருக்கு” ரம்யாவும் யோசனையாய் சொன்னாள்.

 “ இவரு  ஊருக்கு  உள்ள ஒரு பேமிலி பிராப்பர்டி இருக்கு. அதையும்   வித்தா மொத்த கடனை அடைக்கலாம் ஆனா?”

“ஆனா என்னடி?”

“அதெப்படி மாமி ? ஊர்ல இருக்கறதுல என்  சிஸ்டருக்கும் பங்கிருக்கு,. அவ ஒத்துக்கனுமில்ல., ?“

“ நல்லா இருக்கே கதை?  நீ தானே அவ மேரேஜுக்கு செலவு பண்ணே?”

“அதெல்லாம் யார் நினைச்சி பாக்குறா? அவ ஒத்துகிட்டாலும்., அவ புருஷன் ஒத்துக்கல.. எப்படியும் அந்த இடம் அறுபது லட்சம் போவும்.. அதுல எனக்கு பாதி பங்கு 30 வந்தாக்கூட இந்த கடனை அடைச்சி ஈஸியா வந்துடலாம். ஊர்லயே ஒரு ஹோட்டல்காரன் விலைக்கு கேக்குறான்..அவ ஒத்துக்க மாட்றா.’

“சரி உன் பாகத்தை மட்டும்  தனியா விக்க முடியாதா?”

“முடியாது. இடம் சிறுசாகிடும். பதினஞ்சுக்கு அறுபதுன்னா டவல் மாதிரி கிடக்கும்  மனை”

“உங்கப்பா என்ன சொல்றார்?”

“ அவர் ஒரு வார்த்தை கண்டிப்பா சொன்னா., அக்கா  ஒத்துக்குவா. அவருக்கு அவ கூட சண்டை. பேச மாட்டார். அவரு போன வருஷம்  பாங்க்லருந்து  வி ஆர் எஸ் வாங்கினார். ஒரு வருசமாச்சி,. பேச்சு வார்த்தை அவ கூட  இல்ல. என்ன பிரச்சனையோ”

“சரி அது போவட்டும்..  ளேன்டு விக்க உங்கம்மா பேசல்மாமே”

  எங்கம்மா போய் கேட்டதுக்கு 2030 வரைக்கும் விக்கற ஐடியா இல்லையா.. விலை இன்னும் பெரிசா போகட்டும்கிறா, அப்பா ஒரு வார்த்தை கண்டிப்பா சொன்னாதான் அவ மசிவா..”

அவர்கள் பேசுவது வெளியே இருக்கும் ரவியின் அப்பாவுக்கும் கேட்கும் என சிவகாமிக்கும் தெரியும்.

“இப்ப உங்களுக்கு தாணே வயித்து வலி?”

“ஆமா. மாமி.. வட்டி கட்ட மாளல., அசல் 45 லட்சம் இப்ப வட்டி 6 லட்சம் .ரெண்டு லேண்டையும் வித்தா தான்  நிம்மதி. இல்ல அந்த  ராகுல் பைனான்ஸுக்கு வட்டி தான் கொடுக்க  முடியும்.. சே”

“சரி முதல்ல உன்னோட ஸ்ரீபெரும்புதூர் லேன்டை வித்து ஒரு பார்ட்டை கொடுக்க பாரு ரவி.  அப்புறம் அப்பா சொத்தை வித்துக்கலாம். அந்த ராகுல் ஒரு மாதிரி.. ” சதாசிவம் சொல்ல

ஸ்ரீபெரும்புதூர் லேன்டை  ரொம்ப கம்மியா கேக்குறாங்க மாமா.  ஆனாலும், கூடிய சீக்கிரம் அதை வித்துட்டு ஒரு 20 லட்ச ரூபா குடுத்து கடன குறச்சிடுவேன்

அப்படி பண்ணுங்க . பாவம் வட்டியே கட்டிக்கிட்டு இருந்தா எப்ப தான் நம்ப அதிலிருந்து மீண்டு வரது?என சொன்னான் சிவகாமி

கொஞ்ச நேரத்தில் அங்க இருந்த  எல்லா குடும்பங்களும் ஒவ்வொருவராக செல்ல.,

“நீங்க, போங்க  ரவி. நான் அப்புறம் வரேன். .ரம்யா.. எனக்கு டிபன் செய்யாத. இங்கயே சாப்ட்டு வரேன்” என்றபடி சதாசிவம் வீட்டின் உள்ளே நுழைந்தார் ரவியின் அப்பா சாரதி.

“வாடா சாரதி ” புன்முறுவலோடு வரவேற்றார்.

சாரதி, சதாசிவத்தை விட பத்து வயது குறைந்தவர் என்றாலும்., சதாசிவத்துக்கு அந்த காம்பவுன்டிலேயே மிக நெருக்கமான  நண்பர்.  

சதாசிவம்- சிவகாமி வீட்டிலிருந்து தன் ஃபிளாட்டுக்கு ரவியும், ரம்யாவும் போக.,

 “மாமி சொன்னதை கேட்டிங்களா?.. ரென்டு லேன்டையும் விக்க பாருங்க”

“பாக்கலாம்.. பாக்கலாம்.. முதல்ல என் பைபாஸ் லேன்டை விக்குறேன்”

“வட்டி மட்டும்  . ஆறு லட்சமாகிடுச்சி,. அதுல ஒரு லட்சமாச்சும் கட்டுன்னு  பைனான்ஸ்ல ராகுல் வந்து உயிர எடுக்கறான்.. இந்த லேன்டை விக்க எவ்வளோ நாளாகும்?”

“ஒன் மந்த்”

“ஒன் மந்தா? அதுவரைக்கு அவன் கிட்ட யார் படறது?”

“ஏதாச்சும் சொல்லி  சமாளிடி..” என்னத்தை சொல்லி சமாளிக்க., ரவிக்கு என்ன சொன்னாலும்  புரியவில்லை.

“என்னை பாத்தா கண்டபடி திட்டுறான். நீயே அவங்கிட்ட பே”சு என சொன்னாலும் சொன்னான், பொழுது விடிந்தால்  ராகுலை எதிர்த்து நிற்பதே அவளுக்கு பயங்கர போராட்டமாக இருந்தது.

இன்று சதாசிவம்.  சிவகாமி தம்பதிக்கு திருமன நாள். அந்த நாள் ரம்யாவுக்கு இனிமையாக ஆரம்பித்தது என நினைத்தாள்.

 காலையில் எழுந்த உடனே குளித்து, ரவிக்கு சொன்னவுடனே அவன் கிளம்பி வந்ததும் சதாசிவம், சிவகாமியிடம் காலில் விழுந்து ஆசி பெற்றதும்.’ ஊரில் இருக்கிற லேண்ட் வித்துட்டு முதல்ல அவங்க கடனை அடைங்கஎன சொன்ன உடனே அதை வந்து யோசனை ஏற்றுக் கொண்டதும், அவளுக்கு பிடித்ததாக இருந்தது .

ஆனால் இனிமையாக தொடங்கி அந்த நாள் அப்படி முடியவில்லை. காரணம் ராகுல்.