மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, May 27, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1758

 

அடுத்த ஞாயிறு ஈஸ்வர் , சமரனை பார்க்க கிளம்பினான்.  அவருடைய வீடு திருவெற்றியூர். அவருடைய வீடு தெருவின் கடைசியில் இருந்தது. தெருவில் இருந்து ஒரு அந்த வீட்டிற்கு  4 அடி அகல சந்து ஒன்று 50 மீ நீளத்திற்கு சென்றது.  சமரனின் வீடு மிகவும் பழைமையான ஓட்டு வீடு. அந்த ஓட்டு வீட்டிற்கு முன்பு மிக சிறிய வரவேற்பு அறை. அங்கு அவர் போனவுடன் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு ஈஸ்வரை உட்கார சொன்னார்.

"இங்கே சேர் இல்லையே? "என அவன் சிரிக்க, அவர் "ஹா... ஹா... ஹா..." என சிரித்தார்.

"திரும்பிப் பாருங்க "என்றார். திரும்பிப் பார்த்தான். அவனது இடப்புறம் ஒரு நாற்காலி இருந்தது. அட, நான் கவனிக்கவில்லையே என்றான். அவர் மறுபடியும் சிரித்தார்.

"அந்த சேர் அப்போதிலிருந்து அங்கேதான் இருக்கிறது. கொஞ்சம் நேரம் அதை உனக்கு மறைத்து வைத்துவிட்டு காட்டினேன்" என சொல்ல அவனுக்கு பகீரென இருந்தது. ஏதேனும் ஒரு பைத்தியக்காரனிடம் மாட்டிக் கொண்டோமோ? "என திரும்பிப் பார்த்தான். மெயின் ரோட்டிலிருந்து பிரிந்த சந்தில் இருந்து அவனது வீடு 50 மீட்டர் தூரத்தில் இருந்தது. தப்பித்து ஓடினால் கூட வந்து பிடித்துவிடுவானா? என நினைக்க, அவர் அதற்கும் சிரித்தார்.

'அப்படி எல்லாம் உன்னை ஒன்றும் செய்து விட மாட்டேன். உட்கார்! ' என்றார். அட, இந்த ஆள் நம்மை விட பயங்கர ஆளா இருக்கானே என நினைக்க, சமரன் ஆன்மா மற்றும் உள்ளுணர்வை பற்றி கதை கதையாக விவரித்தார்.

அதை கேட்கும் போது தான் இந்த உலகம் ஈஸ்வருக்கு வேறாக தோன்ற துவங்கியிருந்தது.

'தம்பி இந்த உலகத்துல மந்திரம், மாயம் எதுவுமே கிடையாது. ஹிப்னாடிசம், மெஸ்மரிஸம் அதுவும் கிடையாது. யோகம், போகம், பேய், பிசாசு, காத்து, கருப்பு எதுவுமே கிடையாது. இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்கிற ஒரு விஷயம் தான் இருக்கு. அது மனுஷனை மட்டுமல்ல, உலகத்தில உள்ள எல்லா ஜீவராசிகளையும் ஆட்டிப்படைக்கிறது. அதுதான் ஒண்னு. ஆன்மா என்ற உள்ளுணர்வு. இது நம்ம ஒவ்வொருத்தங்க கிட்டயும் இருக்கு.. அதை களங்கப்படாம பாத்துக்கனும்.. முறையா பயிற்சி செஞ்ச்சா அதை நமக்கு ஆக்கபூர்வமா பயன்படுத்திக்கலாம்."

"என்ன சார் ?ஏதோ சங்கர் பட கிராபிக்ஸ் மாதிரி சொல்றீங்க?

"இல்லப்பா. ஒவ்வொரு உயிருக்கும் ஓர் ஆன்மா இருக்கு. அந்த ஆன்மா அதோட அசாத்தியமான உள்ளுணர்வால பிணைக்கப்பட்டிருக்கிறது. கடவுள் இந்த உலகத்துல உயிர்களை படைக்கும் போது எல்லா உயிர்களை படைக்கும் போது, எல்லா உயிர்களுக்கும் ஒரு சமமான உள்ளுணர்வை கொடுக்கிறான். ஆனால், நம்முடைய மனிதர்கள் அதீதிமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அந்த உள்ளுணர்வை பயன்படுத்த முடியவில்லை. அதனால் தான் நாம உள்ளுணர்வில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். இப்போ உனக்கு இருக்கிற உள்ளுணர்வு ஒரு சராசரி மனுஷனுக்கு மேற்பட்ட  உள்ளுணர்வு. ஆனால், அந்த உள்ளுணர்வு கூட மத்த ஆளுங்களுக்கு கிடையாது. அதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு. இந்த உள்ளுணர்வை நீ இன்னும் சிறப்பாக மேம்படுத்திக்கிட்டா  இந்த உள்ளுணர்வு வெச்சி உன்னால நல்ல காரியங்கள் நிறைய பண்ணமுடியும். எனக்கும் உதவியா இருக்க முடியும். "

"எப்படி சார்?'

"உன்னுடைய ஆன்மாவை நீ சுத்தமாக வச்சுக்க முடியும். அதன் மூலமாக மத்தவங்களுடைய ஆன்மாவை சுத்தப்படுத்தலாம். இதன் மூலமாக இந்த நாட்டுல எந்த கொலையும், குற்றமும் எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கலாம்"

" புரியல சார்"

'அதாவது தம்பி, ஒருத்தன் செத்துப் போயிட்டான் அப்படின்னா, காலம் காலமா அந்த ஆவி அலையுது என்று சொல்றாங்க இல்லையா? ஆனால், அந்த ஆன்மா ஒரு ஆளை கொல்லுமா? எனக் கேட்டால் கொல்லாது. ஆனால், அந்த ஆன்மா இன்னொரு ஆளுடைய புத்தியில் புகுந்து அந்த புத்தியை தாறுமாறா யோசிக்க வைக்கும். அவ்வளவு தான். நமக்கு வரக்கூடிய கோபம், காமம், பொறாமை, அதிதிமான பேராசை இதுதான் மோசமான ஆன்மா. இதுதான் பேய். மத்தபடி இந்த உலகத்திலேயே  பேய் கிடையாது, பிசாசு கிடையாது. சினிமால வரது போல எந்த பேய்யும் புடவை கட்டி,டைலர்கிட்ட ஒயிட் பிளவுஸ் தைச்சி போட்டுகிட்டு.பூக் கடையில போய் மல்லிப்பூ வாங்கி தலையில் வச்சுக்கிட்டு ஆளை எல்லாம் மயக்காது. அடிக்கடி ஆள மாத்தாது. "

"அடடே"

"நம்ம எல்லோருக்குமே இருக்கக்கூடியது உள்ளுணர்வு. இப்போ நீ செத்துப்போற, நான் செத்துப் போறேன். ஆனா, நம்ம ஆன்மா என்ன ஆகுது? அது தான் எண்ண அலைகள். அந்த உள்ளுணர்வு அங்கேதான் இருக்கிறது. அது அந்த வீட்டிலேயே தான் அலையுது. அது தனக்கு வேண்டிய பட்டவர்களுக்கு நல்லது செய்து, தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களுக்கு கெடுதல் செய்ய நினைக்குது. ஆனா, நல்ல ஞாபகம் வச்சுக்கோ, எந்த ஆன்மாவுக்கும் கை கிடையாது, கால் கிடையாது, உருவம் கிடையாது, ஏன் முகமும் கிடையாது, மதம் கிடையாது, ஸ்பரிசமும் கிடையாது.அதால புல்லை கூட புடுங்க முடியாது, ".

"சார் எனக்கு தலையே சுத்துது சார்."

" இல்ல தம்பி, நம்ம காலங்காலமாக பேய், பிசாசு அப்படின்னு ஒரு உருவத்தை சொல்லி, பேர சொல்லி நம்ம நமது உள்ளுணர்வையும், ஆன்மாவையும் கொச்சைப்படுத்தி இருக்கோம். உண்மையிலேயே அது கிடையாது. உன்னுடைய ஆன்மா தெளிவா இருந்தால், நல்லதா இருந்தால் உனக்கு எந்த கெடுதலும் நடக்காது. உன்னுடைய ஆன்மா நல்லதா இருக்கணும்னா, நீ நல்ல காரியத்தை செஞ்சிருக்கணும். ஒருவேளை உன் ஆன்மா கெட்டுப் போச்சுன்னா, அதற்கு என்னனென்னா பரிகாரம் என்று பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதை செய்யணும்"

"என்ன சாமி செய்யறது?”

ஹா..ஹா.. என சிரித்தார்.

பரிகாரம் சொன்னவுடனே என்ன என்று கேட்கிறாயே, தம்பி சாதாரணமா ஒரு வீட்ல அடிக்கடி பிரச்சினை வருதுன்னா, அந்த வீட்டில் ஆன்மா கெட்டுப் போயிருக்கு என்று அர்த்தம். வீட்டு வாசல்ல அலங்கோலமாய் விடக்கூடிய செருப்பு, படிகாரம் கட்டாம இருக்கிற வாசல், வீட்டு வாசலுக்கு முன்னாடி தண்ணீர் தேங்கி இருக்கிறது, இது எல்லாமே அந்த ஆன்மாவை சீரழித்துவிடும். அதுபோல, ஒரு வீடு சுடுகாடு பக்கத்துல, இறைச்சிக்கடை பக்கத்துல, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் எதிர்க்க இருக்கக்கூடாது. இந்த மாதிரி நிறைய இருக்கு".

"சரிங்க சார், அப்போ பேய் பிடிக்கிறது என்றதே தப்பா? அந்த மாதிரி ஒண்ணும்  இல்லங்களா?. "

"தம்பி, நான் சொன்னது போல எந்த ஆன்மாவும் எதனாலும், யாருக்கும் நேரடியாக தீங்கு பண்ணமுடியாது. இப்போ பேய் பிடிக்கிறது என்றால் என்னவென்று சொல்றதுக்கு முன்னாடி உனக்கு ஒரு டெமோ காட்டுறேன் பாரு. இது என்ன? "எனக் கேட்டார். டேபிள் மேலே ஓர் பென்சில் இருந்தது.

"இந்த பென்சில் கீழே விழுமா?, "

"விழாது சார். அது டேபிளில் சரியா தான் இருக்குது.

"இப்போ விழ வைக்கிறேன் பார்! " என அதை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார். அடுத்த சில விநாடிகளில் அது உருண்டு ஓடியது. கீழே தரையில் விழுந்தது

ஈஸ்வர் திகைத்துப் போய் பார்க்க, " இதை அசைக்க வெச்சது எது தம்பி.? "

".ச...சார்ர்."

"இது சாம்பிள்தான் தம்பி, இவ்வளவு தான் என் உள்ளுணர்வுக்கு இருக்கக்கூடிய சக்தி. இன்னும் அதிகம் போனால் இப்ப பாரு! "என்று சொல்லி டேபிள் மேல இருந்த ஒரு டீஸ்பூன் எடுத்து தனது முன்னால் வைத்தார். ஆனால், அதற்கு கொஞ்சம் நேரம் ஆனது. ஒரு அசைவும் தெரியாத போது கொஞ்ச நேரத்தில் அந்த டீஸ்பூன் லேசாக வளைந்தது.


------------------------------

 

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்